சாராம்சம்
கண்ணனின் சுருண்ட குழல்களை சீப்பால்
வாரி அழகு படுத்தும் நோக்கத்துடன் யசோதை
அங்கிருக்கும் காக்கையை அழைக்கிறாள்.
காக்கையை அவன் கூந்தலை வாரிவிடுமாறு
விளையாட்டாக கூற, கண்ணனும்
அவ்விளையாட்டில் தன்னை மறந்தவனாய்
தன் கூந்தலை வாரி முடிய இசைவதுபோல்
அமைந்துள்ளது இப்பாசுரங்கள்
(1)
பின்னை மணாளனைப் பேரிற் கிடந்தானை
முன்னையமரர் முதல் தனிவித்தினை
என்னையும் எங்கள் குடிமுழுதாட்கொண்ட
மன்னனை வந்து குழல்வாராயக்காக்காய் !
மாதவன்தன் குழல்வாராயக்காக்காய்
பாசுர அனுபவம்
நப்பின்னை பிராட்டியின் நாயகன், திருப்பேர்
என்ற திவ்ய தேசத்தில் சயனித்திருப்பவன்,
பகவதநுபவத்தில் முதன்மையாய் விளங்கும்
நித்யஸூரிகளின் தலைவன், தனிநிகரற்றவன்,
எல்லாவற்றிற்கும் காரணமானவன், எங்கள்
குடும்பங்களிலுள்ள அனைவரையும் அன்பினால்
கவர்ந்த தலைவனுமான கண்ணனின் கூந்தலை
வார வா, காகமே! மாதவனின்
கூந்தலை வார வா காகமே!
(2)
பேயின்முலையுண்ட பிள்ளையிவன் முன்னம்
மாயச்சகடும் மருதுமிறுத்தவன்
காயாமலர் வண்ணன் கண்ணன் கருங்குழல்
தூய்தாகவந்து குழல் வாராயக்காக்காய்!
தூமணிவண்ணன் குழல்வாராயக்காக்காய்.
பாசுர அனுபவம்
பூதனையிடம் பால் அருந்துவதுபோல் அவள்
உயிரை குடித்தவனும், வஞ்சனையுடன் வந்த
சகடாசுரனை மாய்த்தவனும், யமளார்ஜுன
மரங்களை சாய்த்தவனும், காயாம்பூ மலர்
போன்ற திருமேனியை உடையவனுமான
கண்ணனின் கருநிற கூந்தலை நன்றாக
வாருவாயாக! காகமே! தூய நீல மணி போன்ற
நிறமுடைய இவனுடைய கூந்தலை சிக்கு
போக வார வா காகமே!
(3)
திண்ணக்கலத்தில் திரையுறி மேல்வைத்த
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும்
அண்ணல் அமரர் பெருமானை ஆயர்தம்
கண்ணனை வந்து குழல்வாராயக்காக்காய் !
கார்முகில் வண்ணன் குழல்வாராயக்காக்காய்.
பாசுர அனுபவம்
உயர்வான இடத்தில் பாதுகாப்பான பாத்திரத்தில்
வைக்கப்பட்டிருந்த வெண்ணையை விழுங்கிவிட்டு,
விரைந்து வந்து ஒன்றும் அறியாத பிள்ளையைப்
போல் உறங்கும் இப்பெருமான் இமையோர்களின்
தலைவன், இடையர்களின் மெய்யன்பன்.
கண்ணனின் கூந்தலை வார வா காகமே!
இருண்ட மேகம் போல் திருமேனி கொண்டவனின்
கூந்தலை வார வா காகமே!
(4)
பள்ளத்தில் மேயும் பறவையுருக்கொண்டு
கள்ளவசுரன் வருவானைத் தான்கண்டு
புள்ளிதுவென்று பொதுக் கோவாய்கீண்டிட்ட
பிள்ளையைவந்து குழல்வாராயக்காக்காய்!
பேய்முலையுண்டான் குழல்வாராயக்காக்காய்.
பாசுர அனுபவம்
நீர்த்தேக்கங்களில் இறையை தேடி வரும்
கொக்குப்பறவையின் உருவம் எடுத்து வந்த
வஞ்சகனான பகாசுரனை வெறும் ஒரு சாதாரண
பறவையென எண்ணி அதன் வாயை தன்
இரு திருக்கரங்களினால் உடனே கிழித்துப்
போட்டவனும், ஒருசமயம் பூதனை என்ற
ராட்சசியின் விஷப்பாலை உண்டவனுமான
இக்கண்ணனின் கூந்தலை வார வா காகமே!
(5)
கற்றினம்மேய்த்துக் கனிக்கொருகன்றினை
பற்றியெறிந்த பரமன் திருமுடி
உற்றனபேசி நீஓடித்திரியாதே
அற்றைக்கும்வந்து குழல்வாராயக்காக்காய்!
ஆழியான் தன் குழல்வாராயக்காக்காய்.
பாசுர அனுபவம்
காகமே ! அங்குமிங்குமாய் பறந்தும் கத்தியும்
திரியாமல் , அன்றொருநாள் கன்றுகளை
மேய்க்கையில் ஒரு அசுரக் கன்றைப் பிடித்து
அதனைக்கொண்டே விளாம்பழ உருவிலிருந்த
மற்றொரு அசுரனை நோக்கி வீசி எறிந்து இரு
அரக்கர்களையும் ஒரே சமையம் கொன்ற
சக்ராயுதம் ஏந்திய பரம புருஷனான கண்ணனின்
அழகிய கூந்தலை வார வா காகமே!
(6)
கிழக்கிற் குடிமன்னர் கேடிலாதாரை
அழிப்பான்நினைந்திட்டு அவ்வாழியதனால்
விழிக்குமளவிலே வேரறுத்தானை
குழற்கணியாகக் குழல்வாராயக்காக்காய்!
கோவிந்தன் தன் குழல்வாராயக்காக்காய்.
பாசுர அனுபவம்
கிழக்கில் குடியிருந்த சில அசுரகுணம் படைத்த
மன்னர்கள், விஷ்ணு பக்தர்களான பாவமறியா,
இந்திராதி தேவர்களை அழிக்க எண்ணிய பொழுது,
தன்னுடைய சக்ராயுதத்தால் கண் சிமிட்டும்
நேரத்தில் அவ்வரக்க மன்னர்களை வதம் செய்த
அந்த கோவிந்தனின் அழகிய கேசத்தை
வாரி மேலும் அழகு படுத்த வா காகமே!
(7)
பிண்டத்திரனையும் பேய்க்கிட்ட நீர்ச்சோறும்
உண்டற்கு வேண்டி நீ ஒடித்திரியாதே
அண்டத்தமரர் பெருமான் அழகமர்
வண்டொத்திருண்ட குழல்வாராயக்காக்காய்!
மாயவன்தன் குழல்வாராயக்காக்காய்.
பாசுர அனுபவம்
ஏ காகமே! பிண்டமாக வைத்த சோற்றையோ,
பிசாசங்களுக்கு இடப்பட்ட நீர் கலந்த சோற்றையோ
விரும்பி பறந்தோடித் திரியாதே!
மேலுலங்களிலுள்ள தேவர்களின் தலைவனும்,
ஆச்சர்யமான செயல்களை கொண்டவனுமான
கண்ணபிரானுடைய, கரு வண்டின் நிறம் போன்ற,
அழகிய கேசத்தை வார வா!
(8)
உந்தியெழுந்த உருவமலர் தன்னில்
சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன்
கொந்தக் குழலைக் குறந்து புளியட்டி
தந்தத்தின் சீப்பால் குழல்வாராயக்காக்காய்!
தாமோதரன் தன் குழல்வாராயக்காக்காய்.
பாசுர அனுபவம்
தனது நாபியிலிருந்து, தாமரைப்பூவில்
உறையும்படி, நான்முக ப்ரஹ்மாவை சிருஷ்டித்த
தாமோதரனின் குழல்கள், புளிப்பழம் கொண்டு
எண்ணெய் தேய்த்துக் குளித்ததால், சிக்கு
பிடித்துள்ளது! காகமே! தந்தச்சீப்பை கொண்டு
குழலை நன்றாக வாரி சிக்கை நீக்குவாயாக!
(9)
மன்னன் தன் தேவிமார் கண்டு மகிழ்வெய்த
முன்னிவ்வுலகினை முற்றுமளந்தவன்
பொன்னின் முடியினைப் பூவணைமேல் வைத்து
பின்னேயிருந்து குழல்வாராயக்காக்காய்!
பேராயிரத்தான் குழல்வாராயக்காக்காய்,
பாசுர அனுபவம்
முன்பு வாமனாவதாரத்தில், அசுர குல ராஜா
மஹாபலியிடத்தில் மூவடி மண் கேட்டு, பின்பு
மூவுலகத்தையும், த்ரிவிக்ரமனாய் அவதரித்து,
முழுவதுமாய் அளந்தபோது, மஹாபலியினுடைய
மனைவியர்கள் கண்ணனின் வடிவைக் கண்டு
மகிழ்ச்சியுற்றார்கள்! ஆயிரம் நாமம்
கொண்டவனின் அழகிய தலையை
புஷ்பப் படுக்கையிலிட்டு, பின்புறமாக இருந்து
கூந்தலை வார வா காகமே!
(10)
கண்டார்பழியாமே யக்காக்காய்! கார்வண்ணன்
வண்டார்குழல்வார வாவென்ற ஆய்ச்சிசொல்
விண்டோய்மதிள் வில்லிபுத்தூர்க்கோன்பட்டன்சொல்
கொண்டாடிப்பாடக் குருகாவினை தானே.
பாசுர அனுபவம்
காள மேகம் போன்ற கூந்தலுடைய கண்ணனை
பிறர் பழிக்காமலிருக்க, அவன் கூந்தலை நன்றாக
வாரி விடுமாறு ஒரு காக்கையை யசோதை
அழைக்கும்படி அமைந்துள்ள, வானளாவிய
மதிள்களுடைய ஸ்ரீவில்லிபுத்தூர் நகர
நிர்வாஹகரான பெரியாழவார் இயற்றிய,
இப்பாடல்களை கொண்டாடிப் பாடுபவர்களின்
பாபங்கள் தொலையும்.
Summary
In the following pAsurams, Yasoda persuades Krishna
to come and have a bath. periAzhwAr captures these
beautiful moments for us. Come, let's indulge
in the divine experience !
(1)
veNNeyaLaindha kuNungum viLaiyAdu puzhudhiyum kondu
thiNNena vivvirAvunnaith thEyththuk kidakka nAnottEn
eNNai puLippazhang kondu ingeththanai pOdhumirundhEn
naNNalariyapirAnE! nAraNA! neerAdavArAy
Purport
Butter smeared all over Your body, emanating odor
thereof and with the dust sticking to Your butter
smeared body, I will not allow You to rollover on
the bed tonight! I have been waiting for You, for
so long now, with shampoo and scented oils to give
You a good bath. Attaining You is a rarity indeed!
O Narayana! come here and have bath!
(2)
kandrugaLodach cheviyil katteRumbu pidiththittAl
thendRik kedumAgil veNNai thiratti vizhungu mAkANban
nindra marAmaram sAyththAy! nee piRandha thiruvONam
indru, nee neerAda vEndum embirAn! OdAdhE vArAy
Purport
If You mischievously let big ants into the ear of calves,
they would run amok. Let me see how then will You get
butter, thus Yasoda lovingly chides Krishna !
As rAmA, in rAmAvathAr, You pierced seven trees with an
arrow! Today is Your auspicious birth star 'Thiruvonam'.
My Lord ! Come, have bath. Do not run away!
(3)
pEychchi mulaiyuNNak kandu pinnaiyum nillAdhennenjam
Aychchiya rellAng koodi azhaikkavum nAnmulai thandhEn
kAychchina neerOdunelli kadAraththil pooriththu vaiththEn
vAyththa pugazh maNivaNNA! manjanamAda neevArAy
Purport
After seeing You sip the poisonous milk from poothana's
breasts, I should have run away in fear, Though cowherd
women counselled against feeding You, I gave You my
breasts to suck milk, out of great love for You.
I have kept gooseberry-stem-soaked -hot water ready.
O beautiful gem hued Lord of everlasting glory!
please come and have bath!
(4)
kanjan puNarppinil vandha kadiya chagada mudhaiththu
vanjagap pEymagaL thunja vAymulai vaiththa pirAnE!
manjaLum chengazhu neerin vAsigaiyum nARu chAndhum
anjanamum kondu vaiththEn azhaganE1 neerAda vArAy
Purport
O Lord! The demon chakatAsurA who came disguised as
cart at the instance of evil Kamsa, was kicked to
death by Your tender feet. You finished poothanA the
deceitful demon, by sucking her life out, while
Your mouth appeared to be fondling her breasts!
I am waiting for You with turmeric, lotus garland,
fragrant sandal paste and mascara. O the beautiful
one! please come and have bath!
(5)
appam kalandha chiRRuNdi akkAram pAliR kalandhu
soppada nAn suttu vaiththEn thinnaluRudhiyEl nambii!
seppiLa menmulaiyArgaL siRupuRam pEsich sirippar
soppada neerAda vEndum sOththambirAn! ingE vArAy
Purport
I am waiting for You with sweet dishes made of milk
O Supreme! If You desire eating them, then You must
first take bath. The girls, with enchanting gold
colored supple breasts, will tease You if You choose
not to come. I beg You, my Lord!
please come and have bath!
(6)
yeNNaik kudaththaiyurutti iLam piLLai kiLLiyezhuppi
kaNNaip puratti vizhiththuk kazhakaNdu seyyum pirAnE!
uNNak kanigaL tharuvan olikadalOdha neerpOlE
vaNNamazhagiya nambii! manjanamAda neevArAy.
Purport
Rolling down oil pots, pinching sleeping kids and
making them cry, popping out eye lids to frighten
others and doing similar such mischievous acts
are perhaps Your pastime! My Lord! I shall give
You fruits. O the noble One of wavy-ocean hue!
Krishna! come and have bath!
(7)
kaRandha naRpAlum thayirum kadaindhuRi mElvaiththa veNNai
piRandhadhuvE mudhalAgap peRRaRiyEn embirAnE!
siRandha naRRAyalar thooRRum yenbadhanAl piRar munnE
maRandhu muraiyAda mAttEn manjanamAda neevArAy
Purport
Since the time of Your birth, I hardly recollect seeing
good milk, curd and butter stored in pots! Being Your
fond mother, I never dare narrate Your mischievous deeds
to others in a way that they chide You!
Please come and have bath!
(8)
kandrinai vAlOlai kattik kanigaLu thiraveRindhu
pinthodarndhOdiyOr pAmbaip pidiththuk kondAttinAypOlum
ninthiRath thEnallEn nambii! nee piRandha thirunannAL
nandrunee neerAda vEndum nAraNA! OdAdhE vArAy
Purport
Tying a palm leaf to the demonic calf's tail, You
flung the calf upward into a tree and felled it's
demonic fruits. Then, running after the evil snake
'Kaliyan', You caught hold of it's tail and danced
on it's hood! How can I fully estimate Your infinite
glories, nArAyaNaa, It's Your birthday, a very
auspicious day. You must have a nice bath.
Don't run away, please come!
(9)
pooNith thozhuvinil pukkup puzhudhiyaLaindha ponmEni
kANap peridhu mugappan Agilum kaNdAr pazhippar
nANeth thanaiyumilAdhAy! nappinnai kANil sirikkum
mANikkamE! yenmaNiyE! manjanamAda neevArAy.
Purport
The dirt smeared on Your body, due to Your playing
in the cowshed, appeared like dust over gold! Even
when others mocked at Your condition, I was overjoyed
looking at Your beauty. Don't You have shame!
Nappinnai will laugh at You if she sees You like this.
O my gem! my pearl! please come and have bath!
(10)
kArmalimEni niRaththuk kaNNabirAnaiyugandhu
vArmali kongai yasOdhai manjanamAttiya vARRai
pArmali thol pudhuvaik kOn pattarbirAn sonna pAdal
seermali sendhamizh vallAr theevinaiyAdhumilarE.
Purport
The incidents relating to Yasoda, the full breasted,
fondly inviting Krishna of dark cloud hue for a bath,
were beautifully narrated in these sweet tamizh
pAsurams by periAzhwAr, the world renowned
administrator of ancient Srivilliputtur. No sins
shall attach to those who recite these pAsurams.
சாராம்சம்
யசோதை கண்ணனை நீராட அழைக்கும்
உரையாடலை சித்தரிக்கும் கீழ்கண்ட
பாசுரங்களை ஆழ்வார் அனுபவித்ததுபோல்
நாமும் அனுபவிக்கலாமே!
(1)
வெண்ணையளைந்த குணுங்கும்
விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணெனவில் விராவுன்னைத்
தேய்த்துக்கிடக்க நானொட்டேன்
எண்ணெய் புளிப்பழங் கொண்டு
இங்கெத்தனை போதுமிருந்தேன்
நண்ணலரிய பிரானே!
நாரணா! நீராடவாராய்.
பாசுர அனுபவம்
வெண்ணையை உனது பிஞ்சு கரங்களைக்
கொண்டு அளைந்து உடம்பெல்லாம் அவ்
வெண்ணை பட்டு உண்டான ஒருவித
நாற்றத்துடனும், விளையாடியதால்
உடம்பில் படிந்த புழுதியுடனும் நீ வந்து,
அப்படியே படுக்கையில் விழுந்து புரள
இன்று இரவு உன்னை நான் அனுமதிக்க
மாட்டேன்! உன்னைக் குளிப்பாட்ட
தேவையான சீயக்காயும், எண்ணையும்
வைத்துக்கொண்டு வெகு நேரமாக
காத்திருக்கிறேன். அனைவருக்கும்
கிடைப்பதற்கு மிக அரியவனே!
நாராயணனே! குளிக்க வரவேண்டும்!
(2)
கன்றுகளோடச் செவியில்
கட்டெறும்பு பிடித்திட்டால்
தென்றிக் கெடுமாகில் வெண்ணெய்
திரட்டி விழுங்கு மாகாண்பன்
நின்ற மராமரம் சாய்த்தாய்!
நீ பிறந்த திருவோணம்
இன்று, நீ நீராட வேண்டும்
எம்பிரான்! ஓடாதே வாராய்.
பாசுர அனுபவம்
கட்டெறும்பைப் பிடித்து கன்றுகளின் காதினுள்
ஊற விட்டால், அக்கன்றுகள் சிதறி ஓடிவிடுமே!
நீ அப்படிச் செய்வதால் உண்பதற்கு உனக்கு
வெண்ணை எப்படி கிடைக்கும் என்று
பார்க்கிறேன்! முன்பு ராமாவதாரத்தில் அம்பால்
ஏழு மரங்களை ஒரே சமயத்தில் துளைத்தவனே!
நீ பிறந்த திருவோண திருநக்ஷத்திரத்
திருநாள் இன்று! எம்பெருமானே! அங்குமிங்கும்
ஓடாமல் குளிக்க வரவேண்டும்.
(3)
பேய்ச்சி முலையுண்ணக் கண்டு
பின்னையும் நில்லா தென்னெஞ்சம்
ஆய்ச்சிய ரெல்லாங் கூடி
அழைக்கவும் நான்முலை தந்தேன்
காய்ச்சின நீரோடுநெல்லி
கடாரத்தில் பூரித்து வைத்தேன்
வாய்த்த புகழ் மணிவண்ணா!
மஞ்சனமாட நீவாராய்.
பாசுர அனுபவம்
பூதனையின் விஷ முலையுண்டு அவள்
உயிரையும் அதனோடு கூட உறிஞ்சியதைப்
பார்த்த போதே நான் பயந்து ஓடியிருக்க
வேண்டும். என் நலம் கருதி
இடைச்சியர்களெல்லாம் ஒன்று சேர்ந்து
என்னைத் தடுத்தும், நான் அதைப் பொருட்
படுத்தாமல் உன்மேல் வைத்த அன்பின்
காரணமாக உன்னை என் முலை தந்து
உண்ணச் செய்தேன். நெல்லி வேரைப்
போட்டு காய்ச்சின நீரை தடாவில் நிரப்பி
வைத்திருக்கிறேன். கீர்த்தி பொருந்திய நீல
மணி நிறமுடைய கண்ணனே! நீராட வா!
(4)
கஞ்சன் புணர்ப்பினில் வந்த
கடியசகட முதைத்து
வஞ்சகப் பேய்மகள் துஞ்ச
வாய்முலை வைத்த பிரானே!
மஞ்சளும் செங்கழு நீரின்
வாசிகையும் நாறு சாந்தும்
அஞ்சனமும் கொண்டு வைத்தேன்
அழகனே! நீராட வாராய்.
பாசுர அனுபவம்
கம்சனின் சூழ்ச்சியால் ஏவப்பட்டு சகட வடிவில்
வந்த க்ரூரமான அசுரனை உனது திருவடிகளை
கொண்டே உதைத்தழித்து, வஞ்சனையுடன் வந்த
பூதனையின் முலையில் வாயை வைத்து
அவளையும் முடித்த எம்பெருமானே! உன் மேனி
அழுகு பெற மஞ்சளையும், நீராடியபின்
சாத்திக்கொள்ள செங்கழுநீர் மாலையையும்,
உன் திருமேனியில் பூசுவதற்காக நறுமணமிக்க
சந்தனத்தையும், கண்களில் இட மையையும்
வைத்துக் காத்திருக்கிறேன்.
அழகானவனே! நீராட வா!
(5)
அப்பம்கலந்த சிற்றுண்டி
அக்காரம் பாலிற் கலந்து
சொப்பட நான் சுட்டு வைத்தேன்
தின்னலுறுதியேல் நம்பீ!
செப்பிள மென்முலையார்கள்
சிறுபுறம் பேசிச் சிரிப்பர்
சொப்பட நீராட வேண்டும்
சோத்தம்பிரான்! இங்கே வாராய்.
பாசுர அனுபவம்
பாலோடு வெல்லம் சேர்த்துக் கலந்த
அப்பத்தையும் அதனோடு கூட
பலகாரத்தையும் உனக்காக சுட்டு
வைத்திருக்கிறேன். பூரணனான நீ அதைத்
தின்ன விரும்பினால் முதலில் நீராட வேண்டும்.
நீ அப்படி வராமல் இருப்பதைப் பார்த்து
பொற்கலசங்களைப்போல் இளமையான
மெல்லிய முலையையுடைய பெண்கள்
உன்மேல் சிறு குற்றங்களைக் கூறி உன்னை
பரிகாசம் பண்ணிச் சிரிப்பார்கள்.
என் ஸ்வாமியே! உன்னைக் கைகூப்பி
அழைக்கிறேன். இங்கே வா!
(6)
எண்ணெய்க் குடத்தையுருட்டி இளம்
பிள்ளை கிள்ளியெழுப்பி
கண்ணைப் புரட்டி விழித்துக்
கழகண்டு செய்யும் பிரானே!
உண்ணக் கனிகள் தருவன்
ஒலிகடலோத நீர்போலே
வண்ணமழகிய நம்பீ!
மஞ்சனமாட நீவாராய்.
பாசுர அனுபவம்
எண்ணை நிரம்பிய குடத்தை கீழே உருட்டியும்,
படுத்துறங்கும் சிறு குழந்தைகளைக்
கிள்ளி அழவைத்தும், கண்களைப் பிதுக்கி
பயமுறுத்தியும் மற்றும் பலவித
குறும்புகளைச் செய்யும் எம்பெருமானே! நீ
தின்னப் பழங்கள் தருவேன். அலைமோதும்
கடல் நீரைப்போல் அழகிய நிறத்தையுடைய
உத்தம புருஷனே! நீராட வா!
(7)
கறந்த நற்பாலும் தயிரும் கடைந்துறி
மேல்வைத்த வெண்ணெய் பிறந்ததுவே
முதலாகப் பெற்றறியேன் எம்பிரானே!
சிறந்த நற்றாயலர் தூற்றும் என்பதனால்
பிறர் முன்னே மறந்து முரையாடமாட்டேன்
மஞ்சனமாட நீவாராய்.
பாசுர அனுபவம்
நீ பிறந்தது முதலாகவே, கறந்து வைத்த நல்ல
பாலையும், தயிரையும், உறியில் வைத்த
வெண்ணையையும் நான் கண்டதில்லை
எம்பெருமானே! சிறந்த தாயான நான்
உன்னுடைய குற்றங்களை பிறரிடம் (அவர்கள்
உன்னைத் தூற்றும் வண்ணம்) மறந்தும்
கூறமாட்டேன்! நீராட வா!
(8)
கன்றினை வாலோலை கட்டிக்
கனிகளு திரவெறிந்து
பின்தொடர்ந்தோடியோர்பாம்பைப்
பிடித்துக் கொண்டாட்டினாய்போலும்
நிந்திறத் தேனல்லேன் நம்பி!
நீ பிறந்த திருநன்னாள்
நன்றுநீ நீராடவேண்டும்
நாரணா! ஓடாதே வாராய்.
பாசுர அனுபவம்
கன்றின் வடிவில் வந்த அசுரனின் வாலைப்
பிடித்து பன மரத்தின் ஓலையை அதன் வாலில்
கட்டி , அக்கன்றைத் தூக்கி விளா மரத்தின்
மேலெறிந்து பழங்கள் விழும்படி செய்தும்,
அதன் பிறகு ஓடிச்சென்று காளியனென்ற
சர்ப்பத்தைப் பிடித்து அதன் தலையின் மேல்
நடனமாடியவன்தானே நீ! உன் சாமர்த்தியத்தை
நான் எப்படியறிவேன், பூரணனே! இன்று நீ
அவதரித்த திரு நக்ஷத்திரத் திருநாளன்றோ!
நாராயணா! நீ நன்கு நீராட வேண்டும்.
ஓடாமல் வந்துவிடு!
(9)
பூணித் தொழுவினில் புக்குப்
புழுதியளைந்த பொன்மேனி
காணப் பெரிது முகப்பன்
ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாணெத் தனையுமிலாதாய்!
நப்பின்னை காணில் சிரிக்கும்
மாணிக்கமே! என்மணியே!
மஞ்சனமாட நீவாராய்.
பாசுர அனுபவம்
பசு மாட்டுக் கொட்டகையில் புகுந்து
மண்ணளைந்ததால் உன் திருமேனி
முழுதும் புழுதியேறி, பொன்னின் மேல்
தூசி படிந்தார்போலிருக்கும். அந்த
அழகான காட்சியை பார்த்து, மற்றவர்கள்
பழிப்பினும், நான் மிகவும் ஆனந்தப் படுவேன்.
சிறிதும் வெட்கமில்லாதவனே! நப்பின்னை
நீ இப்படி இருப்பதைப் பார்த்தால் சிரிப்பாளன்றோ.
மாணிக்கமே! மணியே! நீராட வா!
(10)
கார்மலிமேனி நிறத்துக்
கண்ணபிரானையுகந்து
வார்மலி கொங்கை யசோதை
மஞ்சனமாட்டிய வாற்றை
பார்மலி தொல் புதுவைக்கோன்
பட்டர்பிரான் சொன்ன பாடல்
சீர்மலி செந்தமிழ்
வல்லார் தீவினையாதுமிலரே.
பாசுர அனுபவம்
கருநிற மழை மேகத்தைவிட சிறந்த
மேனியழகுடைய கண்ணபிரானை விரும்பி,
கச்சைக்கடங்காத ஸ்தனங்களையுடைய யசோதை,
நீராட அழைத்ததை, பழமையான
ஸ்ரீவில்லிபுத்தூரின் நிர்வாஹகரும், உலகப் புகழ்
வாய்ந்தவருமான பெரியாழ்வார் செந்தமிழில்
அருளிச்செய்த இப்பாசுரங்களை ஓதுபவர்கள்
பாபங்கள் யாவும் நீங்கப் பெற்றவர்களாவர்கள்.