சாராம்சம்
யசோதை தன் மகன் கண்ணனை இதுவரை
ஒன்றுமறியாத ஒரு சிறு பிள்ளையாகத்தான்
எண்ணி வந்தாள். ஆனால் அவன் அவ்வப்போது
அரங்கேற்றிய குரும்புச் செயல்களையும்,
அமானுஷ்ய செயல்களையும் கண்டு அவளுக்கு
ஒருபக்கம் ஆச்சர்யமும், ஒருபக்கம் பயமும்
ஏற்படுகிறது. அவளால் அவன் செய்யும்
விஷமத்தை கண்டிக்கவோ, கட்டுப்படுத்தவோ
இயலவில்லை. அவன் மேல் பழி சொல்
வருவதை தடுக்க முடியாமல் தவிக்கிறாள்.
அவன் தெய்வம்தான் என்பதை
உணர்கிறாள். அந்த உணர்வால்,
கண்ணனுக்கு பாலூட்ட தன்னுடைய
முலையைக் கொடுக்கவே அஞ்சுகிறாள் !
(1)
தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு
தளர்நடை இட்டு வருவான்
பொன்ஏய் நெய்யொடு பால்அமுது உண்டு
ஒரு புள்ளுவன்பொய்யே தவழும்
மின்நேர் நுண்ணிடை வஞ்சமகள் கொங்கை
துஞ்ச வாய்வைத்த பிரானே!
அன்னே!உன்னை அறிந்துகொண்டேன்
உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
பாசுர அனுபவம்
தன்னோடு கூட பிறந்த தன்னை ஒத்த, ஆயிரம்
பிள்ளைகளோடு தளர் நடையாய் வருகிறான்
கண்ணன்! பொன்நிற நெய், பால் இவற்றை
ஆய்ச்சிகளின் வீடுகளிலிருந்து திருடி நன்றாக
புசித்துவிட்டு, ஒன்றும் தெரியாத ஒரு சிறு
குழந்தை போல் தவழ்ந்து வேஷம் போடுபவன்
தான், ஒருசமயம் வஞ்சனையோடு வந்த
நூலிடை கொண்ட பேய்மகள் பூதனையின்
முலையில் தன் திரு வாயை வைத்து பாலை
உறிஞ்சி சுவைத்து அவளையும் மாண்டு
போகச்செய்தான்! எம்பெருமானே! உன்னை
இதுவரை என் மகனாய்த்தான்
எண்ணியிருந்தேன். ஆனால் நீ அருந்தெய்வம்
என்று உணர்ந்தபின், உனக்கு பாலூட்ட
என் முலையைத் தரவே பயமாக உள்ளது !
(2)
பொன்போல் மஞ்சனம் ஆட்டி
அமுது ஊட்டிப் போனேன் வருமளவு இப்பால்
வன் பாரச் சகடம் இறச் சாடி
வடக்கில் அகம் புக்கு இருந்து
மின்போல் நுண்ணிடையாள் ஒரு கன்னியை
வேற்றுருவம் செய்து வைத்த
அன்பா! உன்னை அறிந்துகொண்டேன்
உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
பாசுர அனுபவம்
தங்க பிம்பம் போலுள்ள உன் திருமேனியை
குளிப்பாட்டி, உனக்கு பாலமுதும் ஊட்டிவிட்டு
நான் யமுனையில் நீராடப் போனேன். நான்
திரும்பி வருவதற்குள், கடினமாயும், கனமாயும்
சக்கர வடிவுகொண்டு வந்த அசுரனை உதைத்து
நிலை குலைய வைத்து, பிறகு வடக்கிலுள்ள
வீட்டில் நுழைந்து, அங்கிருந்த மின்னிடை
கொண்ட ஒரு பெண்ணை வேறு ஒரு உருவமாகச்
செய்தவனே! உன் ஸ்வாமித்தனத்தை
புரிந்து கொண்டேன். உனக்கு பாலூட்ட
என் முலையைத் தரவே பயமாக உள்ளது !
(3)
கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக்
குடத் தயிர் சாய்த்துப் பருகி
பொய்ம் மாய மருது ஆன அசுரரைப்
பொன்றுவித்து இன்று நீ வந்தாய்
இம் மாயம் வல்ல பிள்ளை நம்பீ!
உன்னை என்மகனே என்பர் நின்றார்
அம்மா உன்னை அறிந்துகொண்டேன்
உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
பாசுர அனுபவம்
குழைந்த பருப்பையும் வெண்ணெயையும்
விழுங்கிவிட்டு, குடத்தில் நிரம்பியிருந்த தயிரை
சாய்த்து குடித்தும், பொய்யையும்,
மாயைகளையும் செய்யக்கூடிய அசுரர்கள்
புகலிடம் கொண்ட இரட்டை மரங்களை
விழுந்து முறியும்படி பண்ணியும், நீ இப்போது
ஒன்றும் செய்யாதவன் போல வந்து நிற்கிறாய்!
இப்படிப்பட்ட மாயச் செயல்களை செய்யவல்ல
பிள்ளையே ! பூர்ணனே! உன்னை
அறியாதவர்கள் 'என் மகனே' என்பார்கள்.
நானோ, நீதான் ஸர்வக்ஞன் என புரிந்து
கொண்டேன். உனக்கு பாலூட்ட என்
முலையைத் தரவே பயமாக உள்ளது !
(4)
மை ஆர் கண் மட ஆய்ச்சியர் மக்களை
மையன்மை செய்து அவர் பின்போய்
கொய் ஆர் பூந்துகில் பற்றித் தனி நின்று
குற்றம் பல பல செய்தாய்
பொய்யா உன்னைப் புறம் பல பேசுவ
புத்தகத்துக்கு உள் கேட்டேன்
ஐயா உன்னை அறிந்துகொண்டேன்
உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
பாசுர அனுபவம்
கண்களில் மையை இட்டுக்கொண்டு
பேதமையாக இருக்கும் இடைப் பெண்களை
உன்னிடம் மோஹிக்கப்பண்ணி அவர்களுடைய
கொசுவ மடிப்பு நிறைந்த அழகிய புடவைகளை
பிடித்துக்கொண்டு அவர்களின் பின்னேபோய்
மறைவாக நின்று கொண்டு பல பல தீமைகளை
நீ பண்ணினாய். அப்படி ஒன்றும் செய்யவில்லை
என்று பற்பல சொற்களால் பொய் சொல்லும் உன்
திறத்தைக் குறித்து ஒரு புத்தகமே எழுதும்படியாக
பலர் கூற என் காதால் கேட்டிருக்கின்றேன்.
அய்யனே, உன்னை அறிந்து கொண்டேன்.
உனக்கு பாலூட்ட பயமேற்படுகிறது!
(5)
முப்போதும் கடைந்து ஈண்டிய
வெண்ணெயினோடு தயிரும் விழுங்கி
கப்பால் ஆயர்கள் காவிற் கொணர்ந்த
கலத்தொடு சாய்த்துப் பருகி
மெய்ப்பால் உண்டு அழு பிள்ளைகள் போல
நீ விம்மி விம்மி அழுகின்ற
அப்பா! உன்னை அறிந்துகொண்டேன்
உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
பாசுர அனுபவம்
மூன்று போதுகளிலும் இடையரால்
கடையப்பட்ட திரண்ட வெண்ணை, தயிர்
இவைகளை புசித்து, அதுதவிர அவ்விடையர்கள்
காவடியில் சுமந்து வந்த பால்
முதலானவைகளை கலத்தோடு சாய்த்துப்
பருகியபின்பும், அந்த சம்பவத்தை மறைத்து,
பசிகொண்டவன் போல் நடித்து,
முலைப்பாலையும் உண்டு விம்மி விம்மி
அழுகின்ற பெரியோனே! உன்னை சுவாமி
என்று அறிந்துகொண்டேன். உனக்கு
பாலூட்ட பயமேற்படுகிறது!
(6)
கரும்பார் நீள் வயற் காய்கதிர்ச் செந்நெலைக்
கற்றாநிரை மண்டித் தின்ன
விரும்பாக் கன்று ஒன்று கொண்டு
விளங்கனி வீழ எறிந்த பிரானே!
சுரும்பார் மென்குழற் கன்னி ஒருத்திக்குச்
சூழ்வலை வைத்துத் திரியும்
அரம்பா ! உன்னை அறிந்துகொண்டேன்
உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
பாசுர அனுபவம்
அடர்ந்து பரந்து கிடந்தும், கரும்பு போல்
உயர்ந்தும் வளர்ந்திருந்த செந்நெல் கதிர்களை,
கன்றுகளோடு கூடின, மாடுகள் மேய்கையில்,
அதில் ஒரு கன்று மட்டும் அத்திரளிலே சேர்ந்து
மேய்கிறாற்போல் பாவனை செய்துகொண்டு
தின்னாமல் நிற்பதைக் கண்டு, இக்கன்று
ஒரு அசுரன் என்று அறிந்து, அக்கன்றை
பிடித்து மற்றொரு அசுரனால் ஆவேசிக்கப்
பட்டிருந்த விளாமரத்தில் வீசியெறிந்து
விளாம்பழங்கள் உதிரும்படி செய்த
பெருமானே! வண்டு மொய்க்கும் பூக்களை
தன்னுடைய மெல்லிய கூந்தலில்
அணிந்திருக்கும் ஒரு இளம் பெண்ணைக்
கவர்வதற்காக அவள் மேல் கண் வலையை
வீசித் திரியும் குறும்புக்காரனே! உன்னை
சுவாமி என்று அறிந்துகொண்டேன். உனக்கு
பாலூட்ட பயமேற்படுகிறது!
(7)
மருட்டார் மென்குழற் கொண்டு பொழில் புக்கு
வாய்வைத்து அவ் ஆயர்தம் பாடி
சுருட்டார் மென்குழற் கன்னியர் வந்து உன்னைச்
சுற்றும் தொழ நின்ற சோதி!
பொருள் தாயம் இலேன் எம்பெருமான்!
உன்னைப் பெற்ற குற்றம் அல்லால் மற்று இங்கு
அரட்டா உன்னை அறிந்துகொண்டேன்
உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
பாசுர அனுபவம்
வேணு கானத்தால் கேட்பவர்களை மயங்கச்
செய்யும் மெலிதான த்வனியை உடைய குழலைக்
கையில் பிடித்து, சோலைகளில் சென்று அந்தக்
குழலை வாயில் வைத்து ஊத, அங்கிருக்கும்
சுருண்ட மெல்லிய கூந்தலையுடைய இடைப்
பெண்கள் உன்னை சூழ்ந்து சேவிக்க, மிகுந்த
ஒளிப் பொலிவுடன் நின்றவனே! எமக்குப்
பெரியோனே! இப்படி தீராத குறும்பு செய்யும்
உன்னைப் பிள்ளையாகப் பெற்றதைத் தவிர
வேறு ஒரு பொருள் லாபமும் எனக்கு இவ்வூரில்
இல்லையே, தீம்பனே! உன்னை சுவாமி என்று
அறிந்துகொண்டேன்.உனக்கு
பாலூட்ட பயமேற்படுகிறது!
(8)
வாளா ஆகிலும் காணகில்லார்
பிறர் மக்களை மையன்மை செய்து
தோளால் இட்டு அவரோடு திளைத்து
நீ சொல்லப் படாதன செய்தாய்
கேளார் ஆயர் குலத்தவர் இப் பழி
கெட்டேன் வாழ்வில்லை நந்தன்
காளாய்! உன்னை அறிந்துகொண்டேன்
உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
பாசுர அனுபவம்
நீ ஒன்றும் செய்யாமலிருந்தாலும், உன்
பெருமை தெரியாதவர்கள் உன்னைப் பார்க்க
விருப்பமில்லாதிருக்கிறார்கள். இப்படியிருக்க,
மற்றவருடைய பெண்களை மயக்கியும்,
அவர்களைத் தோளால் அணைத்தும் ,
அவர்களோடு இன்புற்றும் நீ, வாயால் பேச
முடியாதவைகளை செய்து இடைக்குலத்தவர்களை
பழிக்கு ஆளாக்கினாய். நானோ இப்பழிகளைக்
கேட்டு தோற்றுப்போனேன்! இவ்வூரில் இனிமேல்
நான் வாழ முடியாது, நந்தகோபனுடைய அழகிய
மைந்தனே! உன்னை அறிந்துகொண்டேன்.
உனக்கு பாலூட்ட பயமேற்படுகிறது!
(9)
தாய்மார் மோர் விற்கப் போவர்
தமப்பன்மார் கற்றா நிரைப் பின்பு போவர்
நீ ஆய்ப்பாடி இளங் கன்னிமார்களை
நேர்படவே கொண்டு போதி
காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து
கண்டார் கழறத் திரியும்
ஆயா! உன்னை அறிந்துகொண்டேன்
உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
பாசுர அனுபவம்
பெண்களை தம் தம் வீடுகளில் தங்கவைத்து
விட்டு, தாய்மார்கள் மோர் விற்பதற்கு வெளியே
செல்வார்கள், தந்தைமார்கள் பசுக்களை
மேய்ப்பதற்கு சென்று விடுவார்கள். அப்படி
அவர்கள் இல்லாத சமயம் பார்த்து நீ அங்கு,
தனியே இருக்கும் இடைப் பெண்களை,
அவர்களிடத்தில் போய் சந்தித்து, நீ விரும்பிய
இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்வாய்!
உன்னை ஏற்கனவே ஏசுபவர்கள், உன்னுடைய
இந்தச் செய்கைகளைக் கண்டு மேலும் உன்மேல்
பழி சுமத்த சந்தர்ப்பம் கிடைத்ததால்
சந்தோஷப்படுகிறார்கள். உன்னை விரும்பவர்கள்
கூட அவர்கள் வெறுக்கும்படி இப்படி
குறும்புகளைச் செய்து திரிகிறாயே! ஆயர்
குலச்செம்மலே! உன்னை தெய்வம்
என்று நான் அறிந்துகொண்டேன்.
உனக்கு பாலூட்ட பயமேற்படுகிறது!
(10)
தொத்தார் பூங்குழற் கன்னி ஒருத்தியைச்
சோலைத் தடம் கொண்டு புக்கு
முத்தார் கொங்கை புணர்ந்து இரா நாழிகை
மூவேழு சென்றபின் வந்தாய்
ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர்
உன்னை உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன்
அத்தா உன்னை அறிந்துகொண்டேன்
உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
பாசுர அனுபவம்
பூங்கொத்துக்களை தன் கூந்தலில் சூடியிருந்த
ஒரு கன்னிப் பெண்ணை பரந்த
சோலையொன்றிற்கு அழைத்துச் சென்று
அவளுடைய முத்து மணி மாலை தவழும்
ஸ்தனங்களைத் தழுவி அவளுடன் கூடி இரவு
மூன்றுயாமங்கள் கழிந்தபின் வீடு வந்து
சேர்ந்தாய். உன்னை பழி சொல்ல
நினைத்தவர்கள் உன்னுடைய தீம்புகளைக்
கண்டு தங்கள் இஷ்டப்படி பேசுகிறார்கள்.
உன்னை அதட்டவோ என்னால் முடியாது.
தந்தையே! உன்னை தெய்வம்
என்று நான் அறிந்துகொண்டேன்.
உனக்கு பாலூட்ட பயமேற்படுகிறது!
(11)
காரார் மேனி நிறத்து எம்பிரானைக்
கடிகமழ் பூங்குழல் ஆய்ச்சி
ஆரா இன்னமுது உண்ணத்தருவன் நான்
அம்மம் தாரேன் என்ற மாற்றம்
பாரார் தொல்புகழான் புதுவை மன்னன்
பட்டர்பிரான் சொன்ன பாடல்
ஏரார் இன்னிசை மாலை வல்லார்
இருடீகேசன் அடியாரே
பாசுர அனுபவம்
கருமையான மேகத்தின் நிறத்தை ஒத்த
எம்பிரானை குறித்து, நறுமணம் நிறைந்த
பூக்களை தன் கூந்தலில் அணிந்த யசோதை
(கண்ணனுக்கு திருப்தி தீர முலைப்பால் தந்த
போதிலும், அவனுடைய உண்மை ஸ்வரூபம்
அறிந்த பின்) அவனுக்கு பாலூட்ட அஞ்சுவள்
எனக் கூறும் பாசுரங்களை சொன்ன உலகில்
புகழ்பெற்றவரும், ஸ்ரீவில்லிபுத்தூரின்
தலைவருமான பெரியாழ்வார் இயலழகோடு
தொடுத்திருக்கும் இன்னிசை மாலையை
ஓதவல்லவர்கள் ஹ்ருஷீகேசனான
எம்பெருமானுக்கு அடியார்களாவர்கள்.
Summary
Krishna torments the cowgirls by taking away their
clothes while they were away bathing in the river.
He refuses to give the clothes back despite the girls
beg Him to do so. As this mischief is played by
Krishna unabated, the girls complain to Yasoda,
but to no avail. Unable to bear the trouble,
they feel that their lives would end if this
goes on unchecked. They wonder why Krishna takes
a tough stance against them even as He is engaged
in the role of protecting His devotees and punishing
the evil doers, which is amply evidenced by His Avatars.
Periazhwar narrates the Lord's punishing attitude towards
cowgirls contrasting with instances of His
protective and kinder aspects.
(1)
AtrilirunThu viLaiyAdu vOngaLai
sEtrA leRinThu vaLaithugil kaikkondu
kAtrin kadiyanAy Odi agampukku mAtramum
thArAnAl indru mutrum
vaLaithiRam pEsAnAl indru mutrum
Purport
While we play by the river side, He throws mud at us;
getaway with our dresses and bracelets, then run
swiftly into His house, answers not our calls
We are done ! no word about our bracelets, We are done !
(2)
kundalam thAzhak kuzhal thAzha nANthAzha
eNthisai yOrum iRainchith thozhuthEththa
vandamar pUnguzhalAr thugil kaikkondu
viNthOy maraththAnAl indru mutrum vEndavum
thArAnAl indru mutrum.
Purport
His ear rings swing, curly hair sways, neck chain dangles,
He is worshiped by all from the eight sides;
Just bee-kissed flowers on our hair; our clothes gone, we're in tangles
He sits atop sky high tree. We are done as He refuses and strides!
(3)
thadampadu thAmaraip poigai kalakki
vidampadu nAgaththai vAlpatri Irththu
padampadu painthalai mElezhap pAinThittu
udambai yasaiththAnAl indru mutrum
uchchiyil nindrAnAl indru mutrum
Purport
When the evil snake entered, the large lotus pond shook
as it splashed the waters and spewed venom, locals terrified
Lord pulled its tail and danced on its open soft hood. Look !
we are done! He dances on top of snake's hood. We are petrified!
(4)
thenukanAvi seguththu panagani
thAneRinThitta thadampeRun thOLinAl
vAnavar kOnvida vanTha mazhaithaduththu Anirai kAththAnAl
indru mutrum avaiyuyyak kondAnAl indru mutrum
Purport
Hurled Denukasura high at a palm tree;
the demon and the devilish fruits fell and perished.
Muscled up, held aloft a hill to shelter cows from Indra's rain spree
We are done! He succoured cows, we are finished.
(5)
Aychiyar chEri aLaithayir pAlundu
pErththavar kandu pidikkap pidiyundu
vEyththadan thOLinAr veNNai koL mAttAthu angu
AppuNdirunThAnAl indru mutrum
adiyundazhuThAnAl indru mutrum
Purport
guzzling thin curd and milk from the cowherd women's place;
disgruntled, He returns for some butter but gets caught
Denying His butter, the women tied Him up without grace
We are done! He gets beaten and cried, we are distraught.
(6)
thaLLith thaLar nadaiyittu iLam piLLaiyAy
uLLaththi nuLLE avaLai YuRanOkki
kaLLaththinAl vanTha pEychchi mulaiyuyir
thuLLach suvaiththAnAl indru mutrum
thuvakkaRa uNdAnAl indru mutrum
Purport
A toddler He was, yet knew the mind of poothana the devil !
who came to feed Him with a poisoned breast
He sucked the milk from her breast with a thrill !
We are done, He drank the poisoned milk, we are not so blest.
(7)
mAvali vELviyil mANuru vAychchendru
moovadi thAvendru iranTha im maNNinai
Oradiyittu iraNdAmadi thannilE
thAvadiyittAnAl indru mutrum
TharaNi yaLanThAnAl indru mutrum
Purport
Begging three feet land from king mahabali in the sacrificial rites
He tricked the king, one foot He measured the whole earth
the second foot that He threw up measured the heavenly heights
O We are done, He measured the worlds, our lives no more worth.
(8)
thAzhaithaNNAmbal thadampeRum poygaivAy
vAzhum muThalai valaippattu vAThippuN
vEzham thuyarkeda viNNOr perumAnAy
AzhipaNi koNdAnAl indru mutrum
aThaRku aruL seiThAnAl indru mutrum
Purport
A big pond with lotus flowers and lilies abound
where a cursed crocodile caught the elephant with its jaws
Lord rushed to the call and His discus had the croc downed
We are finished. He liberated the tusker. but we suffer without a cause !
(9)
vAnath thezhunTha mazhai mugil pOl engum
gAnaththu mEynThu kaLiththu viLaiyAdi
yEnath thuruvAy idanTha im maNNinai
thAnaththE vaiththAnAl indru mutrum
Tharani yidanThAl indru mutrum
Purport
Black as dark cloud He takes the form of a boar
roams around forest searching food and plays with delight
He dives deep into ocean and retrieves Earth from its core
We are done, He recovered the globe, But we see no light.
(10)
angamalak kaNNan thannai yasOThaikku
mangai nallArgaL thAmvanThu muRaipatta
angavar sollaip puThuvai kOn pattan sol
ingivai vallavarkku EThamondrillaiyE
Purport
Gracious cowgirls lamented lotus-eyed Krishna's mischief
their pleas to Yasoda gets narrated by Periazhwar, Srivilliputtur's head
who composed these words as pasurams in brief
No evil attaches to those who recite these as said.
சாராம்சம்
கண்ணன், இடைப் பெண்கள் குளிக்கையில்,
அவர்களுடைய ஆடைகளை மறைத்தும்,
எத்தனை மன்றாடியும், ஆடைகளை திருப்பித்
தற மறுத்தும் அவர்ளை துன்புறுத்துகிறான்.
எத்தனையோ அவதாரங்களில் பல சாகசங்களைப்
புரிந்து ஆஸ்ரிதர்களை காப்பாற்றிய கண்ணன்,
எங்களை மட்டும் இப்படி தீமைகளால் வருத்தி
எங்கள் வாழ்வே முடிந்துவிடும்போல் செய்கிறானே
என்று அந்த இடைப்பெண்கள் யசோதையிடம்
கதறி முறையிடுவதை, பெரியாழ்வார்
பாசுரங்களாக அருளிச் செய்கிறார்.
(1)
ஆற்றிலிருந்து விளையாடு வோங்களை
சேற்றா லெறிந்து வளைதுகில் கைக்கொண்டு
காற்றின் கடியனாய் ஓடி அகம்புக்கு மாற்றமும்
தாரானால் இன்று முற்றும்
வளைத்திறம் பேசானால் இன்று முற்றும்.
பாசுர அனுபவம்
நாங்கள் ஆற்றில் விளையாடுகையில் எங்கள்
மேல் சேற்றை வாறி எறிந்துவிட்டு, எங்களுடைய
கை வளையல்களையும், புடவைகளையும் தன்
கைகளால் கழற்றிக்கொண்டு, காற்றினும்
வேகமாக ஓடிவந்து தன் வீட்டினுள் புகுந்து,
உன் மகனைப் பேர் சொல்லி அழைத்தும் அவன்
பதில் சொல்லாமல் இருக்க, எங்கள் உயிர் இன்றே
போகும்! எங்கள் வளையல்களை திருப்பி
தருவத்தைப்பற்றி ஒன்றும் கூறாமலிருக்கும் உன்
பிள்ளையைக் கண்டு இன்று முடிவோம் !
(2)
குண்டலம் தாழக் குழல்தாழ நாண்தாழ
எண்திசை யோரும் இறைஞ்சித் தொழுதேத்த
வண்டமர் பூங்குழ லார்துகில் கைக்கொண்டு
விண்தோய் மரத்தானால் இன்று முற்றும் வேண்டவும்
தாரானால் இன்று முற்றும்.
பாசுர அனுபவம்
காதில் அணிந்திருக்கும் குண்டலங்கள் தாழ்ந்து
அசைய, அழகிய கூந்தல் அசைய, கழுத்திலிருக்கும்
மாலை அசைய, எட்டு திசையிலிருந்து அனைவரும்
துதித்து வணங்கிப் போற்றும் பெருமானாகிய
இந்தக் கண்ணன், வண்டுகள் மொய்த்த பூக்களை
சூடியிருக்கும் ஆயர் குலப் பெண்களாகிய எங்கள்
புடவைகளை, நாங்கள் ஆற்றங்கரையில் கழற்றி
வைத்து குளித்துக்கொண்டிருக்கையில், தூக்கிக்
கொண்டு போய் வானளாவிய மரத்தின் உச்சியில்
உட்கார்ந்து கொண்டிருப்பதால், எங்கள் உயிர்
இன்றே போகும்! கெஞ்சிக் கேட்டும் புடவையைத்
தர அவன் மறுப்பதால், இன்று முடிவோம்!
(3)
தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம்படு நாகத்தை வால்பற்றி ஈர்த்து
படம்படு பைந்தலை மேலெழப் பாய்ந்திட்டு
உடம்பை யசைத்தானால் இன்று முற்றும்
உச்சியில் நின்றானால் இன்று முற்றும்.
பாசுர அனுபவம்
காளியன் என்கிற விஷப் பாம்பு, பெரியதான
தாமரை குளத்தில் குதித்தும், ஜலத்தை கலக்கியும்,
விஷத்தை கக்கியும், ஊர் ஜனங்களை குளத்தை
அண்டவிடாமல் தடுத்தும் பயமுறுத்தி வந்த
நிலையில் ஒரு சமயம் அந்த கொடிய பாம்பு
தன் தலையை வெளியே தூக்கிய பொழுது,
கண்ணன் அதன் வாலைப் பிடித்திழுத்து அதை
படமெடுக்கச் செய்து, அதன் மெத்தென்ற
தலைமேல் துள்ளி குதித்து உடல் அசைத்து
ஆடுகிறான். நாங்கள் வாழ்வது கடினம்.
எங்கள் உயிர் இன்றே போகும் ! நாகத்தின்
தலை உச்சியில் நின்று ஆடுகிறான்.
நாங்கள் இன்று முடிவோம் !
(4)
தேனுக னாவி செகுத்து பனங்கனி
தானெறிந்திட்ட தடம்பெறுந் தோளினால்
வானவர் கோன்விட வந்த மழைதடுத்து
ஆநிரை காத்தானால் இன்று முற்றும்
அவையுய்யக் கொண்டானால் இன்று முற்றும்.
பாசுர அனுபவம்
கழுதை வடிவத்தில் வந்த தேனுகாசுரனை
பனை மரத்தின் மேலே சுழற்றி எறிந்து கொன்று,
அசுரத்தன்மை கொண்ட பனைப் பழங்களையும்
கீழே விழச்செய்து, தன்னுடைய மிகப் பெரிய
தோளினால் கோவர்தன மலையை தூக்கி,
இந்திரன் பொழிவித்த பலத்த மழையை தடுத்து
பசுக்களின் கூட்டத்தை ரக்ஷித்துக்கொடுத்த
கண்ணன், எங்களிடம் தீமை செய்வதால்,
இன்று முடிவோம் ! அவன் அப்பசுக்கூட்டத்தை
வாழச் செய்து, எங்களை மறந்தானல்லவோ!
நாங்கள் இன்று முடிவோம்!
(5)
ஆய்ச்சியர் சேரி அளைதயிர்
பாலுண்டு பேர்த்தவர்
கண்டு பிடிக்கப் பிடியுண்டு
வேய்த்தடந் தோளினார்
வெண்ணைகொள் மாட்டாது அங்கு
ஆப்புண் டிருந்தானால்
இன்று முற்றும் அடியுண்டழுதானால்
இன்று முற்றும்
பாசுர அனுபவம்
ஆய்ச்சியர் வசிக்கும் இடத்தில், அவர்கள்
வீட்டில் வைத்திருந்த சிலுப்பிய தயிர், பால்
இவைகளை புசித்தும் த்ருப்தியடையாதவனாய்,
மீண்டும் வெண்ணை திருட புகுந்தபோது,
அங்கு ஒளிந்துகொண்டிருந்த இடைச்சிகள்
அவனைப் பிடித்து கட்டிப்போட்டு, வெண்ணை
உண்ணமுடியாமல் அவர்கள் வீட்டில்
கட்டுண்டவனால், நாங்கள் இன்று முடிவோம்!
அவர்களிடம் அடி வாங்கி
அழுதவனால் இன்று முடிவோம்!
(6)
தள்ளித் தளர் நடையிட்டு இளம் பிள்ளையாய்
உள்ளத்தி னுள்ளே அவளை யுறனோக்கி
கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலையுயிர்
துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும்
துவக்கற உண்டானால் இன்று முற்றும்.
பாசுர அனுபவம்
கால்கள் ஊன்றி நடக்க முடியாத குழந்தைப்
பருவத்திலிருந்த கண்ணபிரான்,கபட வேஷம்
பூண்டு முலையில் விஷத்தைத் தடவிக்கொண்டு
அவனுக்கு பாலூட்டி கொல்ல வந்த பூதனையை,
தன் மனக்கண்ணால் அவள் வந்த நோக்கத்தை
அறிந்து, அவள் உயிர் துடிக்கும்படி முலையை
உறிஞ்சி பாலை சுவைத்து உண்டானல்லவோ!
நாங்கள் இன்று முடிவோம்! பற்றில்லாமல்
விஷப் பாலை உண்டவனால் இன்று முடிவோம்!
(7)
மாவலி வேள்வியில் மாணுரு வாய்ச்சென்று
மூவடி தாவென்று இரந்த இம் மண்ணினை
ஓரடியிட்டு இரண்டாமடி தன்னிலே
தாவடியிட்டானால் இன்று முற்றும்
தரணி யளந்தானால் இன்று முற்றும்.
பாசுர அனுபவம்
மஹாபலி நடத்திய யாகத்தில் பிரம்மச்சாரி
உருவத்தில் சென்று அவனிடம் மூன்று அடி
நிலத்தை யாசகமாய் பெற்று, ஒரு அடியால்
மண்ணுலகம் முழுவதும் அளந்து, இரண்டாம்
அடியால் தாவி மேலுலகங்கள் அனைத்தையும்
அளந்தவனால் இன்று முடிவோம்! உலகத்தை
அளந்தவனால் இன்று முடிவோம்!
(8)
தாழைதண்ணாம்பல் தடம்பெறும்பொய்கைவாய்
வாழும் முதலை வலைப்பட்டு வாதிப்புண்
வேழம் துயர்கெட விண்ணோர் பெருமானாய்
ஆழிபணி கொண்டானால் இன்று முற்றும்
அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும்
பாசுர அனுபவம்
தாழ்ந்து தொங்கும் தாழம்பூ மலர்களும், ஆம்பல்
மலர்களும் நிறைந்த மிகப் பெரிய குளத்தில்
வாழ்ந்து வந்த முதலையின் வாயில் சிக்கி
துன்பத்தால் தவித்த யானையின் துயர் தீர்க்கும்
பொருட்டு, நித்யஸூரிகளின் தலைவனான
பெருமான் கருட வாகனத்தில் விரைந்து வந்து
தனது சக்ராயுதத்தால் முதலையைத் துணித்து
கஜேந்திரனின் புஷ்ப கைங்கர்யத்தை
பெற்றுக் கொண்டவனால் இன்று
முடிவோம்! அந்த யானைக்கு அருள்
பாலித்தவனால் இன்று முடிவோம்!
(9)
வானத் தெழுந்த மழை முகில் போல் எங்கும்
கானத்து மேய்ந்து களித்து விளையாடி
ஏனத் துருவாய் இடந்த இம் மண்ணினை
தானத்தே வைத்தானால் இன்று முற்றும்
தரணி யிடந்தானால் இன்று முற்றும்.
பாசுர அனுபவம்
மழை மேகம் திரண்டு வானத்தில் எழுந்தாற்
போல் கருத்த நிறம் கொண்டு, ஒரு பன்றி
உருவம் தரித்து, காடு முழுவதும் திரிந்து,
உணைவைத் தேடி உண்டு,ஆரவாரத்துடன்
விளையாடியும், ஹிரண்யாக்ஷனால் பாயைப்
போல் சுருட்டி அபகரிக்கப்பட்ட பூமியை,
அவனைக் கொன்று, தன் கோர தந்தத்தினால்
குத்தி கடலுக்குள்ளிலிருந்து வெளியே
கொணர்ந்து ரக்ஷித்துக் கொடுத்த
கண்ணபிரானால் இன்று முடிவோம்! பூமியை
தன்னுடைய தந்தத்தினால் மீட்டெடுத்தவனால்
இன்று முடிவோம்!
(10)
அங்கமலக் கண்ணன் தன்னை யசோதைக்கு
மங்கைநல் லார்கள் தாம்வந்து முறைபட்ட
அங்கவர்சொல்லைப் புதுவைகோன் பட்டன்சொல்
இங்கிவை வல்லவர்க்கு ஏதமொன்றில்லையே.
பாசுர அனுபவம்
நல்ல குணம் பொருந்திய இடைக்குல
மங்கைகள், செந்தாமரைப்பூவை ஒத்த
கண்களையுடைய கண்ணபிரானின் தீம்புச்
செயல்களை பற்றி யசோதையிடம் கதறி
முறையிட, அவர்கள் சொன்ன சொற்களை,
ஸ்ரீவில்லிபுத்தூர் தலைவன் பெரியாழ்வார்
பாசுரமாக அருளிச்செய்ய, இப்பாசுரங்களை,
இந்த சம்சாரத்தில் இருந்துகொண்டே
ஓதவல்வர்களுக்கு ஒருவகை
குற்றமும் இல்லையாம்.